Tuesday, December 26, 2006

பால் மழை

பெண்ணே
உனது பார்வை விந்தால்
எனது மனப்பையில் துளிர்த்த
அதிசயப் பிறவி
இக்காதல்.

* * *

எனது திருஷ்டியால்
உனக்கு நோய் என்றாய்;
உண்மையெனில்
உன்னால் எப்படி நடமாட முடிகிறது?

'எப்போதும் என் நினைவுதானா' - கேட்டாய்
இல்லை கண்ணே இல்லை
இப்போதெல்லாம் என்னால்
உன்னை மறக்கமுடிகிறது,
என் இதயத் துடிப்புகளின்
இடைவெளிகளில்.

* * *

அன்று
நம் பால நாட்களில்
உனது பரிச்சயம்
இன்று
உன் பார்வைக் கிரணங்களால்
எனக்குப் பச்சையம்.

ஆம்...
என் பாலையிலும்
மழை;
அதுவும்....
பால் மழை.

தொலைத்தவள்

என் நினைவுகளைச் சிதைத்து
சிரித்தபடிச் செல்கிறாய்
என் கனவுகளைக் கனமாக்கி
காணாததுபோல் செல்கிறாய்

வீழ்ந்துகொண்டிருக்கும் நான்
எழுவது எங்கே, . . . சொர்க்கத்திலா?

தனித்தனி மனங்கள்
தனித்தனிச் சுமைகள்
நட்பு எனும் நீராவது ஊற்றி
மலர வை முடிந்தால்.

* * *

உன் பார்வையால்
என் தனிமையை இழந்தேன்
உன் சிரிப்பால்
என் உணர்வை இழந்தேன்
உன் குணத்தால்
என் இதயத்தை இழந்தேன்
உன் பாசத்தால்
என்னையே இழந்தேன்

உன்னால் எனக்கு
இழப்பு மட்டுமே.